இளநிலை உதவியாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட 9350 காலி பணியிடங்களுக்கு 17 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வாணைய தேர்வு எழுதினார்கள். இதில் பி.ஹச்.டி பட்டம் பெற்றோரும் அடங்குவர். இன்னும், பலலட்சம் பேர் ‘வேலை கிடைக்காது‘ என்ற அவநம்பிக்கையால் தேர்வு எழுதாமல் இருந்திருக்கலாம். நாட்டில் வேலையில்லாத நிலைமை இப்படி இருக்க, மத்திய உயர் அமைச்சர், “பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்புதான்” என்று பேசி இருக்கிறார். வேலையில்லாத பிரச்சனையை, வாழ்வாதார பிரச்சனையை எவ்வளவு துச்சமாக இந்த அரசுக்கள் எடுத்து கொள்கின்றன?
நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இவ்வங்கி நஷ்ட கணக்கு கட்டி இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டுகிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் மட்டுமே ரூ. 11,500 கோடி மோசடி நடந்திருக்கிறது. இந்திய வங்கிகளுக்கு ஏற்கனவே ரூ. 10 லட்சம் கோடிக்கு வாரா கடன் உள்ளது. இந்த அளவுக்கு மோசடிகளும், முறை கேடுகளும் அரங்கேற காரணமான உயர் அதிகாரிகளை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பு பணத்தை வைத்து முறைகேடு செய்யும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும்? அனால், இதையெல்லாம் தேசிய விவாதம் ஆக்காமல், மௌனமாக கடந்து செல்லும் மக்களை பற்றியும், அரசியல் கட்சிகளை பற்றியும் என்ன சொல்வது?..........